உத்தரப்பிரதேச மாநிலம் எடாவா தேசிய நெடுஞ்சாலையில் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர். அப்போது வண்டியின் சைலன்சரில் தீப்பற்றியெரிவது கூட தெரியாமல் இருவரும் பயணித்தனர். இந்நிலையில், அவ்வழியாக வாகனத்தில் வந்த காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் தீப்பிடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை பின்தொடர்ந்துச் சென்ற காவல் துறையினர் அந்த தம்பதியினரை வண்டியை விட்டு இறங்கச் சொல்லி கத்தியுள்ளனர்.
இதன்பின்னர், வண்டியில் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ந்துபோன தம்பதியினர் உடனடியாக வண்டியை நிறுத்தி கீழே இறங்கினர். வேகவேகமாக வந்த காவல் துறையினர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி தீயை அணைத்து அவர்களை காப்பாற்றினர். இருசக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த துணிப்பையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது என தெரியவந்துள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் தீக்காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர்.
இந்தத் தீயினால் ஏற்படவிருந்த பயங்கர விபத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கர சம்பவத்தை படம்பிடித்த உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் தற்போது இந்தக் காணொளி காட்சி வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.