பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் மகனுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லி மோதிலால் நேரு மார்க்கில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காகவே தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். டெல்லி செல்லும்போது பிரதமர், மூத்த அமைச்சர்களை ஆளுநர் சந்திப்பது வழக்கமான ஒரு நிகழ்வாக இருந்தாலும், அண்மையில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் அமித் ஷாவை சந்தித்ததைத் தொடர்ந்து ஆளுநரும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அமைச்சர்கள் அமித் ஷாவின் சந்திப்பு எப்படி ரகசியம் காக்கப்பட்டதோ, அதேபோல ஆளுநரின் சந்திப்பும் அவ்வாறே நடைபெற்றது. பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஆளுநர் சந்தித்த புகைப்படங்கள் தாமதமாகவே வெளியாகின.
இந்தச் சந்திப்பில் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளவும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் தன்மை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள சூழலில் சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் விதமாக என்ஆர்சிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு விரும்புவதாகவும், அதற்கு பாஜக எதிராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.53,000 கோடி நிலுவைத் தொகை கட்டவேண்டிய வோடபோன் சி.இ.ஓ நிதியமைச்சருடன் சந்திப்பு!