ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு தகுதியை ஆளும் பாஜக அரசு ரத்து செய்ததையடுத்து, அங்குள்ள நிலவரத்தை நேரில் அறியவும், அம்மக்களுடன் உரையாடவும் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஜம்மு-காஷ்மீருக்கு சென்றனர்.
டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஷரத் யாதவ், தினேஷ் திரிவேதி, திருச்சி சிவா, மஜீத் மேமன், மனோஜ் ஜா, குபேந்திரா ரெட்டி ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர். இந்நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக குலாம் நபி ஆசாத் இரண்டு முறை காஷ்மீர் சென்று விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டார்.
முன்னதாக இன்று காலையிலேயே ஜம்மு காஷ்மீர் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பதிவிடப்பட்ட ட்வீட்டில், "ஜம்மு - காஷ்மீர் மக்களை தீவிரவாத தாக்குதல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் முயன்று கொண்டிருக்கும் வேளையில், அரசியல் தலைவர்களின் திடீர் வருகை மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.