உத்தரகாண்ட் மாநிலத்தில் சோமேஸ்வரா பகுதியைச் சேர்ந்த அனுதீப் ஹெக்டே, டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மினுஷா காஞ்சனை கடந்த நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் மக்களுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவுசெய்தனர். அதன்படி, தேனிலவை ஒத்திவைத்துவிட்டு சோமேஸ்வரா கடற்கரையைச் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சோமேஷ்வரா கடற்கரையில் ஏழு நாள்களில் 700 கிலோவிற்கும் அதிகமான கழிவுகள், 500 கிலோ நெகிழி ஆகியவற்றை இந்த இணை சேகரித்தது. அதிகப்படியான கழிவுகள் உள்ளதால், நாள்தோறும் இரண்டு மணி நேரம் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தம்பதியின் முயற்சியைப் பார்த்து வியந்த உள்ளூர்வாசிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கைக்கோக்க முன்வந்துள்ளன. தற்போது, சோமேஸ்வரா கடற்கரையில் நூற்றுக்கணக்கானவர்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
நம் நாட்டில் சமூகப் பணிகளை ஆரம்பிப்பதில் பலருக்கும் தயக்கம் உள்ளது. அதே சமயம், ஒருவர் தொடங்கிவைத்தால் ஆதரிக்க நிச்சயம் ஏராளமானோர் முன்வருவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இந்தத் தொடக்கத்தை வரும் நாள்களில் தன்னிரபாவி, கபு, மால்பே, மரவந்தே கடற்கரைகளில் செய்திட முடிவுசெய்துள்ளனர். புதுமண தம்பதியின் முயற்சியைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.