டெல்லி : காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. விவசாயிகளும் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை எதிர்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முன்னதாக இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் விடுபடவேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசிய காணொலியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவரது பதிவில், "நீங்கள் கூறுவது எதைப்பற்றி ராகுல் காந்தி? முன்னதாக, நீங்கள் வாதிட்டதை இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள். நாட்டின் நலன், உழவர் நலன் ஆகியவை தொடர்பாக நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் பாசாங்குத்தனம் செயல்படாதது உங்கள் துரதிர்ஷ்டம். உங்களது இரட்டைத் தன்மையை நாட்டு மக்களும் விவசாயிகளும் அறிந்து கொண்டனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரிடம் மனு வழங்கும் ராகுல் காந்தி!