சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை சென்றார். ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் பெரும் திரளான மாணவர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, "கடந்த 36 மணி நேரமாக பல பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். சோர்வை உங்களிடம் காணவில்லை. ஒரு பணியை முடித்த முழு திருப்தியை காண்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சி இளைஞர்களுக்கு உதவும். இதனால் புதிய தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு அறிமுகமாகிறது.
நிகழ்ச்சியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகள் நாளை தொழில் தொடங்குபவர்களுக்கு உதவும் என நம்புகிறேன். சவால்களை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண துடிக்கும் உங்களின் மனநிலை சவாலில் வெற்றிபெறுவதை விடச் சிறந்தது.
முக்கியமாக, கவனம் செலுத்தாதவர்களை கேமரா மூலம் அடையாளம் காணும் புதிய கண்டுபிடிப்பு என்னை ஈர்த்துள்ளது. இது குறித்து, சபாநாயகரிடம் பேசவுள்ளேன். நாடாளுமன்றத்திற்கு இது உதவும் என நம்புகிறேன்" என்றார்.