கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளியோர் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தை உலகிற்கு உடைத்துக் காட்டும் விதமாக ஹரியானாவில் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் வசித்து வந்த முகேஷ் என்ற கூலித் தொழிலாளி ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து வேலைக்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
கையிலிருந்து பணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய, வேறுவழியின்றி முகேஷ் தன் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை இரண்டு நாள்களுக்கு முன்பு வெறும் இரண்டு ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்று, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், ஒரு மின்விசிறியையும் வாங்கியுள்ளார்.
இதையடுத்து மன அழுத்தத்துக்குள்ளான முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதிவாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் கேட்டபொழுது, "எங்களுக்கு வழங்கப்படும் உணவு போதுமானதாக இல்லை. குழந்தைகளுக்குப் பால் கிடைப்பதில்லை. இரவு நேரத்தில் உண்பதற்குப் போதிய உணவு கிடைப்பதில்லை" என வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : பூர்வகுடிகளுக்கு உதவிய மாணவ காவலர் படை!