கடந்த ஜனவரி 31ஆம் தேதி, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்தே வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையே, சட்டங்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். இருப்பினும், எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாலை 5 மணி வரை, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை கூடியதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 18 வயது சிறுமியை (கிரேட்டா தன்பர்க்) எதிரியாக கருதும் அளவுக்கு இந்தியா பலவீனமாக உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபடும்போது அமைதியாக இருக்க முடியாது.
இதுவரை, 206க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். டெல்லிக்குள் நுழையாதவாறு விவசாயிகளை தடுத்து நிறுத்த இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் உரைக்கு பிறகு விவசாயிகள் விவகாரம் குறித்து பேச கோரிக்கை விடுத்தோம். சச்சின், லதா மங்கேஷ்கர் போன்ற பிரபலங்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 18 வயது சிறுமியை எதிரியாக கருதும் அளவுக்கு இந்தியா பலவீனமாக உள்ளதா? " என்றார்.