ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஆர்.ஜி.வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் பாதிப்பிற்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றத் தவிறிய இந்நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆய்வில் இந்த ஆலை செயல்பட எவ்வித தடையும் இல்லை என அலுவலர்கள் அதிகாரப்பூர்வ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே, இந்நிறுவனம் விஷவாயு கசிவு விபத்திற்கு பொறுப்பேற்காமல், தங்களுடைய ஆலை விரிவாக்கத்திற்கும், பணிகளுக்கும் சான்றிதழ் வழங்கிய அரசு அலுவலர்கள் மீது குற்றஞ்சாட்டிவருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலர், இந்நிறுவனம் சில அபாயகரமான வேதிப்பொருள்களைத் தவிர மற்ற பொருள்களுக்கு உரிய அனுமதிப்பெறவில்லை என்றும், அரசு வணிகங்களை விரிவாக்குவதற்கும், செயல்படுவதரற்கும் பல்வேறு சுற்றுச்சூழல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அரசின் இந்தச் செயல் நாட்டில் சுற்றுச் சூழலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவருவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.
முன்னாள் எம்எல்ஏ பல்லா ஸ்ரீனிவாச ராவ் இதுகுறித்து கூறுகையில், பதினோறு பேரை பலிகொண்ட இந்த கோர விபத்திற்கு அந்நிறுவனம் இன்னும் பொறுப்பேற்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போதுவரை முறையாக மீட்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு முறையான நிவாரணங்களும் வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சமூக ஆர்வலரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலருமான ஈ.ஏ.எஸ் சர்மா பேசுகையில், மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்திய நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், நாட்டில் வணிகங்களை எளிமையாக்குவதன் மூலம், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் ஊடுருவிவருவதாகவும், இதற்காக மத்திய, மாநில அரசுகள் சுற்றுச்சூழல், காலநிலை, வனப்பாதுகாப்பு உள்ளிட்ட சட்டங்களையும், நடைமுறைகளையும் படிப்டியாக தளர்த்தி வருவதாகவும், இது நாட்டை மாசுபடுத்தும் தொழில் நிறுவனங்கல் அமைய வழிவகுக்கும் எனவும் வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்