கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்துவருகின்றனர்.
அனைத்துவிதமான போக்குவரத்துச் சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் மாநிலத்துக்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வழக்குரைஞர்கள் இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு சார்பாக முன்னிலையான துஷார் மேத்தா, "ஆறு லட்சத்து 63 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்களுக்கு இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. 22 லட்சத்து 88 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் வெளிமாநில தொழிலாளர் ஒருவரைக்கூட காண முடியாது. அப்படியிருந்தால், அவர்கள் உதவி மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
கிராமப்புறங்களில் அந்தளவுக்குத் தாக்கம் ஏற்படவில்லை. ஆனால், நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் செல்லும் பத்து பேரில் மூவருக்கு கரோனா பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. எனவே, நோயைக் கட்டுப்படுத்தும்விதமாக மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான உணவு, இருப்பிடத்தை அரசு உறுதிசெய்துள்ளது. உதவி மையங்களில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிவருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: வீட்டிற்குச் செல்ல 200 கி.மீ., நடந்த கர்ப்பிணி