போபால்: டெல்லியில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், கடந்த 16ஆம் தேதி மதுரா ரயில் நிலையத்தில், வீடியோ கால் மூலம் தனது மருத்துவ நண்பரின் உதவியை பெற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வே பிரிவு மருத்துவமனையின் தொழில்நுட்ப வல்லுநர் சுனில் பிரஜாபதி, இவர் வீடியோ கால் உதவியுடன் மருத்துவர் சுபர்ணா சென்னிடமிருந்து பிரசவம் பார்ப்பதற்கான அறிவுரைகளைப் பெற்றார். இந்தக் காட்சிகள் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தை நினைவுகூர்கிறது. இந்தத் திரைப்படத்தில் மருத்துவம் பயிலும் கதாநாயகியின் உதவியுடன் சகோதரிக்கு, விஜய் பிரசவம் பார்ப்பார். அதேபோல தொழில்நுட்ப வல்லுநர் மருத்துவரான தனது நண்பரின் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "டெல்லியின் நிஜாமுதீனில் இருந்து சாகர் செல்வதற்காக நான் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ரயில் ஃபரிதாபாத்தை தாண்டியபோது, பெண் ஒருவர் வலியால் அழுவதைக் கண்டேன். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதை என்னால் அறிய முடிந்தது. அவரிடம் பிரசவ தேதி குறித்து விசாரிக்கையில் வரும் 20ஆம் தேதி பிரசவத்திற்கான தேதியினை மருத்துவர் குறித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் நான் பணிபுரியும் மருத்துவமனையில் மகளிர் பிரிவு மருத்துவராக உள்ள மருத்துவர் சுபர்ணாவை தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினேன். பின்னர் அவர் அளித்த அறிவுரையினை கவனமாகப் பின்பற்றி பிரசவத்தை மேற்கொண்டேன். இதில் குழந்தை நல்ல உடல் ஆரோக்யத்துடன் பிறந்தது. பின்னர், குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்" எனக் கூறினார்.
"ஒரு குழந்தையை பிரசவிக்க பெண்ணுக்கு உதவியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஒரு மருத்துவர் அல்ல, ஆனால் இந்த பெண்ணுக்கு உதவிய பிறகு, நான் மருத்துவராக உணர்ந்தேன்" என்று உணர்ச்சிகரமாகக் கூறினார்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய செவிலியர்!