'மூன்று நாள்கள் பிரமாண்ட விழா', 'வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வீடுகள்' 'பிரமாண்ட ஸ்பீக்கர்ஸ்' 'கறி விருந்து' 'குடும்பத்தினர் வருகை' எனக் காட்சி தரும் திருமண வீடுகள் தற்போது களை இழந்துபோகியுள்ளன. கல்யாணம் என்று சொன்ன போதும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் முதல் ஆளாக நண்பர்கள், உறவினர்கள் வந்து நிற்பார்கள். இத்தகைய விழாவை, கரோனா ஒரு நிமிடத்தில் மாற்றிக்காட்டியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டான திருமணம் தான் புனேவில் நடைபெற்றுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ், அஞ்சலி ஆகிய இருவரும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கமானது, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை முறையாக இரு வீட்டாரின் பெற்றோர்களுக்கும் தெரிவித்து திருமணத்திற்குச் சம்மதம் வாங்கினர்.
அதன்படி, 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்த இவர்களின் திருமணத்திற்காக சுமார் ஒரு ஆண்டுகளாக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இச்சமயத்தில் தான், கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. கரோனா வைரஸின் தலைநகரமாக இருக்கும் மகாராஷ்டிராவில் விக்னேஷ்-அஞ்சலி ஜோடி, சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நி்லை ஏற்பட்டது. லாக்டவுன் முடியும் முடியும் என எதிர்பார்த்த காதல் ஜோடிக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது.
மே இறுதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாததால், இருவரும் நிச்சயிக்கப்பட்ட தேதியிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளில் மணமகன், மணமகளின் நண்பர்கள் முழு வீச்சில் களமிறங்கினர். இதற்காக, ஆன்லைன் வீடியோ கான்ஃபெரன்ஸ் செயலியான ஜூமில் உலகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட உறவினர்களையும், குடும்பத்தினரையும் இணைக்க முடிவு செய்தனர்.
கேரளாவில் ஊரடங்கில் தளர்வு உள்ள காரணத்தினால், திருமணத்திற்குத் தேவையான தாலி, திருமண உடைகள் ஆகியவற்றை ஸ்பீடு போஸ்ட் மூலம் பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
அதன்படி, மணமகன் விக்னேஷ் வீட்டில் தான் திருமண விழா நடைபெற்றது. மணமகன், மணமகள் நண்பர்கள், குடும்பத்தினரின் பிரதிநிதியாக செயல்பட்டு சடங்குகளை நடத்தினர். இவர்களின் திருமணத்திற்கு உறவினர்கள் ஜூம் செயலியில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருமணத்தில் புதுமை... மாஸ்க்கில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்!