டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக, டெல்லி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பரப்புரையின்போது தடையற்ற மின்சாரம், குப்பை இல்லாத டெல்லி, 24 மணி நேரமும் குடிநீர் வசதி உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி முன்வைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி பெருவாரியான வெற்றிபெற இந்த வாக்குறுதிகளும் முக்கியக் காரணம் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து.
இந்நிலையில் இந்த 10 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "10 வாக்குறுதிகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த செயல்திட்டத்தை தயாரிக்க ஒவ்வொரு துறைத் தலைவர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
10 வாக்குறுதிகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த திட்டத்தைத் தயாரிக்க சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு தாக்கல்செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வோம்" என்றார்.
டெல்லி சட்டப்பேரவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷா- அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு