ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு கடந்த 5ஆம் தேதி நீக்கியது. மேலும், அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்குப் பாகிஸ்தானும், சீனாவும் கவலை தெரிவித்துள்ளன. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் அது மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில், லடாக் பகுதியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஹோடன் என்ற சீன நகரில், சீனா-பாகிஸ்தான் விமானப்படையினர் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஜெ-10, ஜெ-11 ஆகிய போர் விமானங்களுடன் சீனாவும், ஜெஎஃப்-17 போர் விமானங்களுடன் பாகிஸ்தானும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய விமானப் படை அலுவலர் ஒருவர் கூறுகையில், " ஷாஹீன் (Shaheen) என்ற பெயரிடப்பட்ட இந்த பயிற்சியானது லடாக்கில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹோட்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்பயற்சிக்கு முன்னதாக, கில்ஜித் பலுசிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள காடூவில் பாகிஸ்தான் விமானப் படையினர் பயிற்சி மேற்கொண்டனர்" என்றார்.
மேலும், இந்த பயிற்சியை இந்திய விமானப் படை கூர்ந்து கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, பாலக்கோடு தாக்குதலின் போது இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான், சீன ராணுவப் பொருட்களையே பெரும் சார்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.