கேரளா மாநிலம் ஆலப்புழாவில் சேரவல்லியைச் சேர்ந்தவர் பிந்து. கணவரை இழந்த இவருக்கு அஞ்சு என்ற மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பற்றி வந்துள்ளார். இந்நிலையில் மகள் அஞ்சுவுக்கு திருமணம் செய்து வைக்க கடுமையாக முயற்சித்து வந்தார் தாய் பிந்து. ஒருவழியாக ஆலப்புழா கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்ற இளைஞருடன் ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயமானது.
ஆனால் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க போதிய வசதியில்லாமல் செய்வதறியாது திகைத்து வந்துள்ளார். இருப்பினும் மகளின் திருமணத்திற்காக பணம் தேடி அலைந்துள்ளார். அப்போது தான் பிந்துவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நஜுமுதீன் என்பவரிடம் தன் கஷ்டத்தைக் கூறியுள்ளார்.
நஜுமுதீன் சேரவல்லி முஸ்லிம் ஜமாத் செயலாளராக உள்ளார். அவர் ஒரு யோசனையை தெரிவித்தார். பள்ளிவாசல் கமிட்டி அதிகாரிகளிடம் உதவி கேட்குமாறு நஜுமுதீன் கூற பிந்துவும் தனது மகள் திருமணத்திற்கு உதவிகோரி பள்ளிவாசல் கமிட்டிக்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். இதையடுத்து அஞ்சுவின் கல்யாண செலவு முழுவதையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக பள்ளிவாசல் கமிட்டி கூறியுள்ளது.
இதனையடுத்து, சேரவல்லி பள்ளிவாசல் வளாகத்தில் மகளின் திருமணத்தை நடத்தலாம் என இஸ்லாமியர்கள் கூற மகளின் திருமணத்தை மசூதியில் நடத்த தாய் பிந்துவும் சம்மதித்தார். திருமணத்திற்கு ஜனவரி 19ஆம் தேதி நாள் குறித்தனர். பத்திரிகையில் தொடங்கி திருமணந்திற்கு தேவையான அணைந்து செலவுகளையும் பள்ளிவாசல் ஏற்றுக்கொண்டது.
அதனை தொடர்ந்து, ஜனவரி 19ஆம் தேதியான நேற்று பள்ளிவாசலில் கமிட்டியின் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இஸ்லாமிய சமூகத்தினர் செய்துவைத்த திருமணம் முழுக்க முழுக்க பாரம்பரிய இந்து முறைபடி நடைபெற்றது. அதற்காக இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சுவுக்கு 10 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை தந்து இந்த திருமணத்தை நடத்தினர்.
இந்து மக்கள், இஸ்லாமியர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் இந்த திருமணந்தில் கலந்து கொண்டனர். பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்தவர்களும் மாணமக்களை வாழ்த்தி சென்றனர்.
இதையும் படிங்க: மூன்று தலைநகரங்களைக் கோரும் தீர்மானம் - கூடும் ஆந்திர சட்டப்பேரவை!