ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய கர்நாடகா திட்டத்தின் கீழ், சுவர்ணா ஆரோக்ய சுரக்ஷா டிரஸ்ட் உடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய கர்நாடகா திட்டத்தின்கீழ், மாநிலம் முழுவதும் மொத்தம் 518 தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் இணைக்கப்படவுள்ளன. மேலும் அரசாங்க நெறிமுறைகளின்படி கரோனா தொற்று நோயாளிகளை அனுமதித்து, சிகிச்சையளிக்க வேண்டும். பெங்களூருவில் இதுபோல 44 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
அதேசமயம் அரசாங்கம் வகுத்துள்ள அனைத்து சிகிச்சை நெறிமுறைகளும் தனியார் மருத்துவமனைகளால் பின்பற்றப்படும். தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளை ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.