இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் மோசமான நிலையை எட்டியுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று மேலும் பரவாமல் இருக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,18,470 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.25 கோடியைக் கடந்துள்ளது.
கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 73.91ஆக உள்ளது. இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 20,96,664 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,86,395 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர், அவர்களில் 0.28 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது.
தற்போது 10 லட்சம் பேரில் 24,668 பேருக்கு கரோனை மருத்துவ சோதனைகள் நடத்தப்படுகின்றன. ரேப்பிட் டெஸ்ட் சோதனையில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 8.95 விழுக்காட்டில் இருந்து 7.58 விழுக்காடாகக் குறைத்துள்ளது.
நாட்டிலுள்ள 26 மாநிலங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம், தேசிய சராசரியைவிட குறைவாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொது மக்களிடையே கோவிட் -19 எந்த அளவு பரவியுள்ளது என்பதைக் கண்டறிய டெல்லியில் நடைபெற்ற ஆய்வில், 29.1 விழுக்காடு டெல்லிவாசிகளின் உடலில் கரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் யாரும் செல்ல விரும்பாத 'மோடி' குகை!