புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் ஜவகர் நகரில் தனியார் மனவளர்ச்சிக் குன்றியவர்கள் இல்லம் இயங்கிவருகிறது. இந்த இல்லத்தில் 30-க்கும் மேற்பட்ட மனவளர்ச்சிக் குன்றிய சிறுமிகள் உள்ளனர். இவர்களுக்கு இங்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாகப் புதுச்சேரி அரசு சமூகநலத் துறைக்குப் புகார் வந்தது.
புகாரின்பேரில் சமூகநலத் துறை அலுவலர்கள், காவல் துறையினர் உதவியுடன் மனவளர்ச்சிக் குன்றியவர்கள் வசிக்கும் இல்லத்திற்குச் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.
மேலும் அங்குள்ள மனவளர்ச்சிக் குன்றிய சிறுமிகளை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் இல்லத்தின் மொட்டை மாடியில் ஏறி நின்று நாங்கள் இங்கிருந்து வரமாட்டோம் என்று கூறியபடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து காவல் துறையினர் அனைவரையும் மீட்டு வேறு ஒரு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த இல்லத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதா? இல்லையா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...அரியலூர் மாணவன் தற்கொலை: ரூ. 7 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை!