உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி ஏவுகணைகள் கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடியவை. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வல்லமை படைத்த இவை ரகசிய ராணுவத் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அக்னி ஏவுகணை இருக்கும் ரகசிய ராணுவத் தளம் அஸ்ஸாமில் உள்ளதாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிராங்க் ஓ டோனல், அலெக்ஸ் பொல்ஃபிராஸ் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்திய-சீன மூலோபாய நிலை என்று பொருள்படும் 'The Strategic Posture of China and India' என்ற பெயரில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் கூறியுள்ளதாவது, "ஊடகங்களில் வெளியான செய்தி, பாகிஸ்தான்-வங்க தேச ராணுவ தகவல்கள், குறிப்பாக இந்திய ராணுவ அலுவலர் ஒருவரின் முகவரி மாற்றம் உள்ளிட்ட தகவலை வைத்து அக்னி ஏவுகணைகள் இருக்கும் ரகசிய ராணுவத் தளத்தைக் கண்டறிந்துள்ளோம்.
அக்னி-2 ஏவுகணைகளை இந்திய ராணுவத்தின் 3341 என்ற குழு இயக்கிவருவதாக வங்கதேச, பாகிஸ்தான் ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3341 குழுவைச் சேர்ந்த ஒரு அலுவலர் தன் வீட்டு முகவரியை 2011ஆம் ஆண்டு அஸ்ஸாமில் உள்ள நாகோனுக்கு மாற்றியதைக் கவனித்தோம். இந்த நபர் 2017ஆம் ஆண்டுவரை அந்த முகவரிலிருந்து மாறவில்லை.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அக்னி-2, 3 ஏவுகணைகள் கண்டிப்பாக அஸ்ஸாம் நாகோன் பகுதியில் உள்ள ரகசிய ராணுவத் தளத்தில் இருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திறந்த மனம், பொறுமையின்மை, நம்பிக்கையுடன் இருங்கள்: சுந்தர் பிச்சை