இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஊரடங்கால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். முதலில் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல அனுமதி தர மறுத்த மத்திய அரசு, பின் மே முதல் வாரத்தில் அதற்கான அனுமதியை அளித்தது.
அதைத்தொடர்ந்து மாநில அரசுகள் வெளிமாநிலங்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும் சிலர் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் தவுத், "தொழிலாளர்கள் நடந்து தங்களது ஊர்களுக்குத் திரும்புவது நல்லதாகத் தெரியவில்லை. அவர்களுடன் குழந்தைகளும் உள்ளனர்.
ரயில்வே துறை போதுமான ரயில்களை இயக்கத் தயாராக இல்லை. எனவே மாநில அரசுகள் தனியார் வாகனங்களை இதில் அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் நடந்துசெல்லும் வழியிலேயே நோய்வாய்ப்படுகின்றனர். சிலர் இறந்தும்போகின்றனர், இருந்தாலும் அவர்கள் நடப்பதை நிறுத்துவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சரத் பவார் வேண்டுகோள் - செவி சாய்ப்பாரா மோடி?