கேரளாவில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் வளைகுடா நாடுகளிலிருந்து பயணிகள் தங்கத்தை அதிகளவில் கடத்திவருவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில், ஷார்ஜாவிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு இன்று (அக்டோபர் 7) காலை வந்த விமானத்தில் பயணிகள் இருவர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், சுங்கத் துறையினர் விமான பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சோதனையிட்டனர். அப்போது பெண்ணொருவர் தனது உள்ளாடைகளில் சுமார் 1.650 கிலோ தங்கம் மறைத்துவைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர்.
மற்றொரு பயணி காப்ஸ்யூல்களின் வடிவத்தில் 650 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்துள்ளார். கடத்திக்கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு 90 லட்ச ரூபாய் என சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கைதுசெய்தனர்.