சிம்லா: முன்னாள் ஆளுநர், சிபிஐ இயக்குனர் அஸ்வனி குமார் (புதன்கிழமை) சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
69 வயதான அஸ்வனி குமாரின் மரணம் தற்கொலையாக இருக்கும் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர். எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்தச் சம்பவம் குறித்த கேள்விபட்டதும் இமாச்சலப் பிரதேசத்தின் காவல்துறை தலைவர் சஞ்சய் காண்டு, சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து, அங்கிருக்கும் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து ஒய்வு பெற்ற முன்னாள் காவல் அலுவலர் ஏ.பி. சிங் கூறுகையில், “எனக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. நான் சிறப்பு இயக்குனராக பணியாற்றிய போது, அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
அவர் ஒரு நல்ல மனிதர். ஒருபோதும் தன்னிலையை (கோபம்) இழக்க மாட்டார். பண்பாக பேசுவார், சிறந்த முறையில் நடந்துகொள்வார். ஒருபோதும் யாரிடமும் குரலை உயர்த்தி பேச மாட்டார்” என்றார்.
அஸ்வனி குமார் 1973ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்தார். 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010ஆம் ஆண்டுவரை சிபிஐ இயக்குனராக பொறுப்பு வகித்தார்.
இவரின் சேவையை பாராட்டி மூன்று ஆண்டுகள் கழித்து இவரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 2013ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமித்தார்.
இவர் சிபிஐ இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில் 2010ஆம் ஆண்டு தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா சோராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.
அப்போது நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தார். இந்த வழக்கில் 22 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் இளம் ஐபிஎஸ் அலுவலர் என்ற பெருமைக்குரியவர் அஸ்வனி குமார். இவர் சிம்லா மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டாகவும் இருந்துள்ளார். மேலும் ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட புதிய பாதுகாப்பு குழுவிலும் அஸ்வனி குமார் இருந்துள்ளார்.
அந்த வகையில் 1985ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு பாதுகாப்பு குழுவில் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர் நேரு காந்தி குடும்பத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர் ஆவார்.
இதையும் படிங்க: நிவாரண் 90 நிறுவனர் சி.கே.ராஜ்குமார் காலமானார்!