கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில், மக்களின் நலனை கருத்தில்கொண்டு உணவுகளை வழங்கும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனத்திற்கு மட்டும் ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெலிவரி பாய்ஸ் வழக்கம்போல் உணவுகளை மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
ஆனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், கடத்தல்காரர்களின் ராஜ்யம் இருந்துதான் வருகிறது. அதற்கு அவர்கள் கையில் எடுத்துள்ள புதிய ஐடியாதான் ஃபுட் டெலிவரி பாய்ஸ்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் , அசார் கான் ஆகிய இருவரும் பிரபல ஃபுட் டெலிவரி டுன்சோ (Dunzo) நிறுவனத்தில் டெலிவரி பாய்ஸாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள இரண்டு தலை பாம்பை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முடிவு செய்தனர். டெலிவரி வண்டியில் உணவுகளை வைக்கும் பேக்கில் பாம்பை அடைத்து பசப்பை கார்டன் பகுதியில் விற்பனை செய்ய புறப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மத்திய குற்றப்பிரிவினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிமிருந்து இருசக்கர வாகனத்தையும், மூன்று செல்ஃபோன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் கை வரிசையில் ஈடுபடும் போதை ஆசாமிகள்