கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதையடுத்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையே, தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகளை எடுக்கும் செயலியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு அளிக்கும் பயிற்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, என்சிசி மாணவர்களுக்கு இணையத்தை பயன்படுத்தி பயிற்சி அளிக்க திட்டமிட்டோம். டிஜிஎன்சிசி என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயிற்சிக்கு தேவையான பாட திட்டங்களும் வீடியோக்களும் இந்த செயலி மூலம் வழங்கப்படவுள்ளது.
சந்தேகங்களை தீர்க்கும் வகையில் செயலி மூலம் மாணவர்கள் கேள்விகளை எழுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார், தேசிய மாணவர் படையின் இயக்குநர் ராஜீவ் சோப்ரா, ராணுவ அலுவலர்கள் ஆகியோர் செயலியின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த நபர்கள் கைது!