உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் யூனியன் பிரதேசங்களில் தீவிரமடைந்து வருகிறது. யூனியன் பிரதேசமான காரைக்காலில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று (ஜூன் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரது 13 வயது மகளுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, புதுவை மற்றும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து, குடும்பத்துடன் சென்னையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிவொன்றுக்கு சென்று வந்தததை அடுத்து தாய், மகள் இருவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
தற்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இது தொடர்பாக பேசிய சுகாதார அலுவலர்கள், "காரைக்காலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நிலையில் வெளி மாவட்டம், மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது" என தெரிவித்தனர்.
திருமலைராயன்பட்டினம் பகுதியை காவல்துறையினர் அடைத்து சீல் வைத்துள்ளனர். கரோனா சிறப்பு மருத்துவக் குழு மூலம் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.