சமீபகாலத்தில் பொறுப்பேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நீதிமன்றத்திற்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி பூஷணின் ட்வீட் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவைத் தாக்கல்செய்ய பூஷண் திட்டமிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனை குறித்த விசாரணையை வேறொரு அமர்வுக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பூஷண் மனு தாக்கல்செய்தார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
பூஷண் தரப்பு வழக்குரைஞர் துஷ்யந்த் தவேவிடம் அமர்வு இது குறித்து கூறுகையில், தண்டனை குறித்த விசாரணையை வேறொரு அமர்வுக்கு மாற்றக்கோருவது முறையற்றது எனக் குறிப்பிட்டது. மேலும், தீர்ப்பை எதிர்த்து பூஷண் சீராய்வு மனுவை தாக்கல்செய்ய உள்ளார் என தவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தண்டனை குறித்த விசாரணை இன்று நடைபெற்றாலும்கூட, சீராய்வு மனுவைத் தாக்கல்செய்யும் வரை தண்டனைக்குத் தடைவிதிக்க முடியும் என பூஷண் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், தண்டனையை ஏற்கத் தயாராக உள்ளதாகவும், மன்னிப்பு கேட்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோர முடியாது என பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்!!!