பாட்னா: மூன்று கட்டமாக நடைபெற்ற பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(நவ.10) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் மகா கூட்டணி, மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்குப் போதிய அளவு பெரும்பான்மை கிடைக்கப்பெறாமல் உள்ளது.
இதனால், தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் பார்வையாளரான அவினாஷ் பாண்டே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு மாறுவதைத் தடுக்க முயற்சி செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
பாட்னாவில் குதிரை பேரம் நடப்பதற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏக்களையும் ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்ல வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் இரண்டு அமைச்சர்கள் ரகு சர்மா மற்றும் ராஜேந்திர யாதவ் ஆகியோர் பாட்னாவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடனுக்குடன்: பிகார் சட்டப்பேரவை முடிவுகள் 2020