கரோனா நெருக்கடி யாசகத்தை நம்பி பிழைப்போர் தொடங்கி, பிஞ்சு குழந்தைகள் வரை பாரபட்சமின்றி அனைவரையும் வதைத்துவருகிறது. கரோனாவின் அதீத கவன ஈர்ப்பால் காசநோய், எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்களினால் மரணம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் அதிகரித்துவரும் கரோனாவைக் காரணம் காட்டி பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணை அம்மருத்துவமனை வீட்டிற்கு அனுப்பியது.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 26 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணை, தனியார் மருத்துவமனை வீட்டிற்கு அனுப்பியது. போதிய மருந்துகள் உணவும் இல்லாத நிலையில் அந்தப் பெண் தற்போது காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் மார்பகப் புற்றுநோயால் மிகவும் கடுமையாக அவதிப்படுகிறேன். என்னால் இந்த வலியை பொறுக்க முடியவில்லை. மார்பகப் புற்றுநோயில் மூன்றாம் கட்ட நிலையை நெருங்கிவிட்டேன். என் உடல்நிலையில் முன்னேற்றம் காணும் முன்னரே மருத்துவமனை என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டது. இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை. அரசு எனக்கு விரைந்து உதவ வேண்டும். அந்த உதவி என்னை இப்புற்றுநோயிலிருந்து மீட்கலாம்” என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இவரை டெல்லி அரசு விரைந்து காக்குமா, என்பதே இக்காணொலியைக் கண்டு நெஞ்சுருகுபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கில் 380 கி.மீ., பயணத்திற்குப் பிறகு குழந்தைக்கு நடந்த இதய சிகிச்சை!