டெல்லியில் மொத்தம் ஏழு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மக்களவை தேர்தல் ஏற்கனவே மூன்று கட்டமாக முடிந்துவிட்ட நிலையில், டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் மே 12ஆம் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லியில் உள்ள ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லி வடமேற்குத் தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அறிவிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது.
இத்தொகுதி எம்.பி.யாக இருக்கும் உதித் ராஜ் மீண்டும் அதேத் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் டெல்லி வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட சூஃபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பாஜக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தனக்கு சீட்டு வழங்காததால் கோபத்தில் இருந்த உதித் ராஜ் தான் பாஜகவில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, சவுகிதார் பெயரை நீக்கிக்கொண்ட உதித் ராஜ் பாஜகவில் இருந்து இன்று பிற்பகல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மேலும், தான் கட்சி மாறியது குறித்து விளக்கம் அளித்த உதித் ராஜ், 'பட்டியலின மக்களின் குரலாக தலித் தலைவர்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாத வகையில் பாஜக திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. பாஜக சொல்வதைக்கேட்டு தலித் வேட்பாளர்கள் தலையாட்டி பொம்மையாக தலையாட்ட விரும்புவதை ஏற்க முடியாது. அதனால்தான் பாஜகவில் இருந்து விலகினேன்' என தெரிவித்தார்.