உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பிரான ஆசம் கான் முறைகேடு வழக்கில் சில நாள்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டார். சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவரான இவர் சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து அவரது மனைவி தசீன் பாத்திமா, மகன் அப்துல்லா ஆசம் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான இவர், தன் மீதான காழ்ப்புணர்ச்சியோடு உத்தரப் பிரதேச அரசால் இதுபோன்ற வழக்குகள் போடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவலர்களின் வாகனத்தில் இருந்துகொண்டு செய்தியாளர்களை நோக்கி பேசிய ஆசம் கான் உத்தரப் பிரதேச அரசு தன்னை பயங்கரவாதி போல நடத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
நில முறைகேடு உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆசம் கான் மீது இதுவரை தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் மீதான விசாரணை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆசம் கான் பெண் உறுப்பினர் ஜெயப்பிரதாவை கண்டனத்திற்குரிய விதத்தில் குறிப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: 'அசாம் கான் அழுவதற்கு பெண்களின் சாபம்தான் காரணம்' - ஜெயப்பிரதா