அசாம் மாநிலத்திலுள்ள சில்சர் குர்சரன் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக சவுரதீப் சென்குப்தா பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த செவ்வாய்கிழமையன்று முகநூலில், “குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கோத்ரா கலவரத்தை மீண்டுமொரு முறை டெல்லியில் உருவாக்க சிலர் முயற்சிப்பதாகக் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அத்துடன், அந்த பதிவில் பிரதமர் மோடியை ‘பெருங்கூட்டத்தைக் கொலைச்செய்தவர்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவைக் கண்டித்து, மாணவர்கள் சவுரதீப் செங்குப்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சவுரதீப், “எனது பதிவில் நான் யாரையும் புண்படுத்த வேண்டுமென கருத்திடவில்லை. என் பதிவு மத உணர்வுகளை புண்படுத்தி இருந்தால், நான் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
வகுப்புவாத முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து நான் பொறுப்பற்ற சில கருத்துக்களை தெரிவித்தேன். இது என்னுடைய பிழைதான். எனக்கு எந்தவொரு மதத்தையும் அவமதிக்க வேண்டுமென்ற நோக்கம் இல்லை’ என தன்னிலை விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கல்லூரி விரிவுரையாளர் சென்குப்தாவை கைது செய்தனர்.
முன்னதாக அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர்! - பிரதமர் புகழாரம்