காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அசாம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அம்மாநிலத்தின் தொலைத்தொடர்பு சேவை, பள்ளிகள், இணைய சேவை ஆகியவை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் முடக்கப்பட்டன. அதையடுத்து ஆகஸ்ட் 17ஆம் தேதி சில இடங்களில் மீண்டும் தொலைத் தொடர்பு சேவை வழங்கப்பட்டது. பின்னர், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் வெடித்ததால் மீண்டும் சேவை துண்டிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி தோடா, கிஷ்த்வார், ராம்பன், ராஜோரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மட்டும் செல்ஃபோன் சேவை அளிக்கப்பட்டது. ஆனால் எஞ்சிய பகுதிகளுக்கு இதுவரை இணைய சேவையும் செல்ஃபோன் சேவையும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. இந்நிலையில், இன்று காஷ்மீரின் முதன்மைச் செயலர் ரோஹித் கன்சல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரானதற்குப் பின் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அதன்படி, அனைத்து தரைவழி தொலைத்தொடர்பு சேவைகள் வரும் 14ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து தொடங்கும்” என்றார்.