கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு கான்வென்ட்டில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டார். கடந்த 28 ஆண்டுகள் 9 மாதங்களுக்குப் பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் நேற்று(டிச.22) தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் திட்டமிட்ட கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்டவைக்காகக் கத்தோலிக்கப் பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்தநிலையில், குற்றவாளிகள் இருவருக்குமான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுமென நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று இவ்வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக, நீதிபதி அறிவித்தார்.
சுமார் 28 ஆண்டுகால வரலாறு கொண்ட கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது.
கேரளாவின் முக்கிய வழக்காகக் கருதப்படும் அபயா கொலை வழக்கு கடந்த வந்த பாதையை விரிவாக காணலாம்.
கன்னியாஸ்திரி அபயா
கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா. கோட்டயம் செயின்ட் பயஸ் கான்வென்ட்டில் தங்கியிருந்த அபயா, கடந்த 1992ஆம் ஆண்டு, மார்ச் 27ஆம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த கான்வென்ட்டிலுள்ள கிணற்றிலிருந்து அபயாவின் உடல் மீட்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கேரள காவல்துறையினர், அபயா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை முடித்தனர்.
விசாரணை சிபிஐக்கு மாற்றம்
ஆனால், அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அபயா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அலுவலர்கள் நடத்திய விசாரணையிலும் அபயா தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் தெரிவித்தனர்.
கொலை தான்
இதனைதொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் இரண்டாவதாக சிபிஐ அலுவலர்கள் கொண்ட குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணையில், அபயா கொலை செய்யப்பட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருந்தபோதிலும், சிபிஐ அலுவலர்களால் யார் கொலை செய்தார்கள் அதற்கான நோக்கம் என்ன என்பதை கண்டறிய இயலவில்லை.
மூன்றாவது சிபிஐ குழு அமைப்பு
இதனைத்தொடர்ந்து, அபயா வழக்கு குறித்து முதலிருந்து விசாரனை தொடங்க மூன்றாவது சிபிஐ அலுவலர்கள் கொண்ட குழுவை அமைக்க, கடந்த 2007 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மூன்றாவது சிபிஐ குழு நடத்திய விசாரணையில், கன்னியாஸ்திரி அபயா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இவ்வழக்கு தொடர்பாக, பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்ரிக்கயில் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
கொலைக்கான காரணம்
கன்னியாஸ்திரி செபியும், பாதிரியார் தாமஸும் நெருக்கமாக இருந்த காட்சியை அபயா பார்த்துவிட்டதால், அவரைக் கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதையடுத்து பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் மீது கொலை வழக்கு, குற்றச் சதி, ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பாதிரியார் புத்ருக்காயலுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால், நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு அவரை விடுவித்தது.
28 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி
சுமார் 28 ஆண்டுகால வரலாறு கொண்ட கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.சனல் குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், பாதிரியார் தாமஸ் கூட்டுர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து இன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: 29 ஆண்டுகால கேரள கன்னியாஸ்திரி மரண வழக்கு ஓர் பார்வை...