சீனாவின் வூகான் நகர் மற்றும் சில பகுதிகள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புகள் இருப்பதாக, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 812 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் பீதியால் யோகோஹமா துறைமுகப் பகுதியில், 138 இந்தியர்கள் உள்ளிட்ட 3,700 பேருடன் சென்ற கப்பல் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சீனாவுக்குச் சென்று திரும்பி வந்ததால், அந்தக் கப்பலில் இருப்பவர்கள் ஜப்பான் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று அக்கப்பலில் மேலும் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கப்பலில் வைரஸ் தாக்கத்துக்கு ஆளானோர் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்த சொகுசுக் கப்பலுக்கு ராணுவத்தை அனுப்ப ஜப்பான் அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பலில் மீட்புப் பணிக்கு ராணுவம் அனுப்பப்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் நிர்வாகப் பணிக்கு அனுப்பப்படுகிறதா என்ற தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, கப்பலில் இருக்கும் கர்நாடக மாநிலம், கார்வார் பகுதியைச் சேர்ந்த 26 வயதான மாலுமி, தமது குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, தங்களை மீட்க மத்திய அரசிடம் உதவிகோரும்படி வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பான் அரசு சீனாவில் சிக்கியுள்ள தங்கள் நாட்டினரை விமானம் மூலம் அழைத்து வருகிறது. அவர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதையும் படிங்க : சீனாவில் கரோனா வைரஸை பரப்பும் பாங்கோலின்?