ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் குல்காம் மாவட்டத்தில் மத்திய ஆயுதக் காவல் படை அலுவலர்களுக்கு புதன்கிழமை (ஜூன் 10) கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர், "ஜூன் 6ஆம் தேதி 90ஆவது பட்டாலியனில் 44 வயதான முதன்மைக் காவலர் ஒருவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
அதன் காரணமாக 90ஆவது பட்டாலியன் பிரிவிலிருந்து 75 அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளில் 28 அலுவலர்களுக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதனால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்தப் பட்டாலியன் படை தெற்கு காஷ்மீர் யுரன்ஹாலில் அமைந்துள்ளது. மொத்தம் 3.25 லட்சம் அலுவலர்கள், பணியாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படை இதுவாகும். அதில் கரோனா காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீரில் மூன்று பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை