இந்தியாவில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் தலையெடுத்து நீண்டகாலம் ஆகிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் எப்படி ஏற்படுகிறது என பி.ஆர். சோப்ரா இயக்கிய ‘நயா தவுர்’ படத்தில் அப்பட்டமாக காட்டப்பட்டிருக்கும். பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் திலிப் குமார் இதில் குதிரை வண்டி ஓட்டுபவராக நடித்திருப்பார்.
ஜமீன்தார் ஒருவரின் மகன், கதாநாயகன் வசிக்கும் கிராமத்தில் குதிரை வண்டிக்கு மாற்றாக பேருந்தை அறிமுகப்படுத்துவான். இதனால் குதிரை வண்டி ஓட்டும் பல தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதை எதிர்த்து கதாநாயகன் போராடுவது போல ‘நயா தவுர்’ படத்தின் கதை இருக்கும்.
தற்போது கரோனா சூழலில், ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. உலகம் முழுவதும் கரோனாவால் பலரும் வேலையிழந்திருப்பது நாம் அறிந்ததே. ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, அதிகப்படியான வேலையிழப்புகளுக்கான அறிகுறியாகும்.
ஆட்டோமேஷன் பயன்பாடு எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றால், உணவகங்களில் கூட மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை சப்ளையர்களாக பயன்படுத்தும் முயற்சி மேலெழுந்துள்ளது. அதேபோல் சில பள்ளிகள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. சில நிதி நிறுவனங்கள் தங்களுக்கு ஆலோசகராக ரோபோக்களை நியமிக்க திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் பயனாளர்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி சேவையை வழங்கமுடியும் என நம்புகின்றனர்.
ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் அதிகரிப்பதன் ஆரம்ப நிலை மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக தெரியலாம். ஆனால், பின்னாட்களில் இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். கணினி தொழில்நுட்பம் நம் நாட்டுக்குள் வந்தபோது, கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தற்போது கணினி இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம். இந்த நிலையை மொபைல் டெக்னாலஜியுடனும் பொருத்திப்பார்க்க முடியும்.
கரோனா காரணமாக தங்கள் தினசரி தொழிலில் மனிதர்களின் பங்களிப்பை சில நிறுவனங்கள் குறைக்க எண்ணுகின்றன. இதன் காரணமாக ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடையும்.
உழைக்கும் வர்க்கத்துக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக இருந்தாலும், இயந்திரங்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் துறையை மேம்படுத்துவதற்கான காலம் இது என பிரதமர் மோடி கூறி வருகிறார்.
பெரு நிறுவனங்கள் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தால் தங்கள் விநியோகச் சங்கலி எந்தவித பாதிப்புமின்றி பாதுகாக்கப்படும் என நம்புகின்றன.
கரோனா பெருந்தொற்று, மருத்துவ நிறுவனங்களுக்கும் ரோபோக்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டு ஏஐ, ஆட்டோமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த 10 துறைகளில்தான் அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. எனவே ஆட்டோமேஷன் துறை சார்ந்து படிப்பவர்களுக்கு எதிர்வரும் காலத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உண்டு.
எழுதியவர்: எம். சந்திரசேகர் (ஹைதராபாத்தில் உள்ள Institute of Public Enterprise-இல் துணை பேராசிரியராக பணிபுரிகிறார்)