சஹாரன்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடிப்போட்டி நடைபெற்றது.
இதில் அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்தப்போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு அங்கிருந்த கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அம்மாவட்ட விளையாட்டு அலுவலர் அனிமேஷ் சக்சேனாவை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதுதொடர்பான வீடியோவில், விளையாட்டு வீரர்கள் கழிப்பறையின் தரையில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் இருந்து உணவை எடுத்துச்சாப்பிடுகின்றனர். அந்தப் பாத்திரங்களுக்கு அருகில் சிறுநீர் கழிப்பறைகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தின் 17 மாவட்டங்களைச்சேர்ந்த மொத்தம் 300 வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க வந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இந்தச்சம்பவம் குறித்து மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஒப்பந்ததாரரை தடுப்புப்பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், 'இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக இது எல்லா பகுதிகளுக்குமான பொதுவான அறிவுறுத்தலாகும்," என்று தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்த விஷயத்தில் கடுமையான முடிவை எடுக்க உத்தரப்பிரதேச விளையாட்டுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.
இதற்கிடையில், காங்கிரஸ் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து ட்வீட் செய்தது. இந்த வீடியோவில், இந்தச்சம்பவம் தொடர்பாக மாநில அரசை கண்டித்தும், விளையாட்டு வீரர்களை அநியாயமாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டி பதிவிட்டிருந்தது.
இதையும் படிங்க:மழைநீர் வடிகால்வாயில் விழுந்த ஐடி ஊழியர்..தொடையில் 35 தையல்களுடன் சிகிச்சை..