கோலாகாட்: உலக காண்டாமிருக தினம் இன்று (செப்.22) கொண்டாடப்படுகிறது. இந்த விலங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அழிவின் விளிம்பில் உள்ள காண்டாமிருக இனத்தை பாதுகாக்க இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் அசாம் மாநிலத்தில் 1979ஆம் ஆண்டு முதல் அரசின் வசம் உள்ள 2 ஆயிரத்து 479 காண்டாமிருகங்களின் கொம்புகளை எரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோலாகாட் மாவட்டத்தில் உள்ள போககாட் பகுதியில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கட்டுக்கதையை உடைக்க விழா
ஏற்கனவே காண்டாமிருக இனம் அழிந்து வரும் நிலையில் சட்டவிரோதமாக அதை வேட்டையாடி, வெளி சந்தையில் அதன் கொம்புகளை மருத்துவ தேவைக்காக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இதன் கொம்புகளுக்கு அறிவியல் ரீதியாக மருத்துவ பயன் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உலக காண்டாமிருகம் தினத்தையொட்டி காண்டாமிருக கொம்புகளின் மருத்துவ குணம் பற்றிய கட்டுக்கதைகளை உடைக்கவும், வேட்டையாடுதலுக்கு எதிராக வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அசாம் அரசு கொம்புகளை எரிக்கும் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

அசாம் மாநில தலைமை வனக்காப்பாளர் எம்.கே.யாதவ் கூறுகையில், " அசாமின் பல்வேறு இடங்களில் இதுவரை 2,623 காண்டாமிருகக் கொம்புகள் நிபுணர்களால் பரிசோதித்து சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இதில் 94 கொம்புகளை பாரம்பரியத்திற்காகவும், கல்வி நோக்கத்திற்காகவும் பாதுகாக்கப்படும். 50 கொம்புகள் நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகளுக்காக வைக்கப்படும். மீதமுள்ள 2,479 கொம்புகள் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 3000 கிலோ ஹெராயின் விவகாரம்: விசாரணையைத் தொடங்கிய காவல் துறை