ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கரஞ்சேடு பகுதியில் உள்ள பி.ஹெச்.சி. மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பலர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவந்த அம்மருத்துவமனையின் மருத்துவர் என். பாஸ்கர ராவ் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிப்படைந்தார்.
அவருக்குத் தொற்று தீவிரமடைந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரின் நுரையீரல் முழுமையாகச் சேதமடைந்துவிட்டதாகவும் அதை மாற்றி அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அதற்கு சுமார் 1.5 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் திகைப்புற்று நின்ற மருத்துவரின் குடும்பத்தினருக்கு கரஞ்சேடு பகுதி மக்கள் உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். மருத்துவரைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டினர்.
இந்தத் தகவல் அமைச்சர் பாலினேனி சீனிவாச ரெட்டியின் மூலமாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 4) ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவர் என். பாஸ்கர ராவ் சிகிச்சைப் பெற அம்மாநில முதலமைச்சர் ஒரு கோடி ரூபாயை விடுவித்தார். முதலமைச்சரின் இந்தச் செயலுக்கு கரஞ்சேடு பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.