ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களைப் பார்த்து அதிகப்படியானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாக பலர் பணத்தை இழந்து பெரும் கடனாளியாகவும், தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அதனால் பல மாநில அரசுகள் அதனைத் தடைசெய்ய மசோதா நிறைவேற்றிவருகின்றன. அதனடிப்படையில், ஆந்திர சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்ய தனி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, "ஆன்லைன் சூதாட்டம் காரணமாக கடனாளிகளான சில இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது வருத்தம் அளிக்கிறது. எனவே அதனைத் தடைசெய்ய தனி மசோதா நிறைவேற்றப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
அதையடுத்துப் பேசிய ஆந்திர உள் துறை அமைச்சர் எம். சுச்சரிதா, "ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் குற்றவியல் நடத்தைகளைத் தூண்டக்கூடும். இது பணமோசடி, கொலை, தற்கொலை என குற்றச் சம்பவங்களை அதிகரிக்கக்கூடும். இந்த மசோதா மூலம் அவை விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரம்மியில் 10.50 லட்ச ரூபாயை கோட்டைவிட்ட மகன் - தந்தைக்கு நெஞ்சுவலி!