விஜயவாடா: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் வினுகொண்டா பானு சாய் பிரதாப். விஜயவாடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வெப் டெவலப்பராக பணியாற்றி வருகிறார். மென்பொருள் துறையில் புதிதாக சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக குறைந்த நேரத்தில், அதிக வலைப்பக்கங்களை உருவாக்குவது குறித்து கற்று வந்தார்.
இந்நிலையில், கணினியில் 22 வலைப்பக்கங்களை (வெப் பேஜ்) 6 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதை சென்னையை அடிப்படையாக கொண்டு இயங்கும் லிங்கன் புக் ஆஃப் ரெக்காரட்ஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. மேலும், வினுகொண்டாவின் சாதனையை பாராட்டி தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு 18 மணி நேரத்தில் 22 வலைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை வினுகொண்டா தற்போது முறியடித்திருக்கிறார். இதுகுறித்து வினுகொண்டா கூறுகையில், "எனது சாதனையை பாராட்டி தமிழ்நாடு அரசு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. ஆனால், ஆந்திர அரசு எதுவும் செய்யவில்லை. மாநில அரசுத்துறைகளில் உள்ள இணையதளத்தை மேம்படுத்த என்னால் முயன்ற உதவிகளை செய்கிறேன்.
அரசுத்துறைகளில் இணையதள வசதி மேம்படுத்தப்பட வேண்டும். இணைய மேம்பாடு என்பது மிகவும் எளிது. அதற்கென தனித்திறமை தேவையில்லை. உரிய கவனம் செலுத்தினால் போதும். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறேன்." என்றார்.
வினுகொண்டாவின் மனைவி சுஷ்மிதா கூறுகையில், "வெப் டெவலப்பிங்கில் அவருக்கு உருவான ஆர்வத்தால்தான், இந்த சாதனையை படைத்திருக்கிறார். எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் அவர், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில்லை. இன்னும் பல சாதனைகளை படைப்பார்." என கூறினார்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர் கைது