கடப்பா : “குண்டூர் ஜின்னா டவரின் பெயரை ஏபிஜே அப்துல் கலாம் டவர் என மாற்ற வேண்டும், ஜின்னா பாகிஸ்தான் நிறுவனர்; இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது பல லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு அவருக்கும் பொறுப்பு உண்டு” என ஆந்திர பிரதேச மாநில பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆந்திர பிரதேச பாஜக துணை பொறுப்பாளர் சுனில் தியோதர் (Sunil Deodhar), “குண்டூரில் உள்ள முகம்மது அலி ஜின்னா கோபுரத்தின் பெயரை ஏபிஜே அப்துல் கலாம் என மாற்ற வேண்டும். பாஜக இஸ்லாமியருக்கு எதிரான கட்சி அல்ல. மாறாக அடிப்படைவாதிகளுக்கு எதிரான இயக்கம்” என்றார்.
தொடர்ந்து, “அகண்ட பாரதம் (இந்தியா) துண்டாடப்பட்டபோது லட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் நிறுவனர் முகம்மது அலி ஜின்னாவும் ஒரு காரணம்” என்றார்.
மேலும், “குண்டூர் கோபுரத்தில் உள்ள முகம்மது அலி ஜின்னா பெயரை நீக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் ஆந்திரா முதல்- அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது குற்றஞ்சாட்டிய சுனில் தியோதர், “இஸ்லாமியர்களின் வாக்கு கிடைக்காது என்ற அச்சத்தில் ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறார்” என்றார்.
இதைத் தொடர்ந்து, “கடப்பாவில் திப்பு சுல்தானுக்கு சிலை எழுப்ப அனுமதிக்க மாட்டோம் என்ற சுனில், திப்பு சுல்தான் ஏராளமான இந்துக்களை கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியவர். அவரின் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான இந்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர் ஒரு காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்” என்றும் கூறினார்.
குண்டூர் கோபுரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு...' - ஆசிரியர்களிடம் அத்துமீறிய தேனி மாணவன்