டெல்லி: டெல்லி ஆளுநரின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் வளாகத்தில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர்.
மத்திய அரசு திங்கள்கிழமை (மார்ச் 15) தேசிய தலைநகர் டெல்லி திருத்தச் சட்டம் 2021 மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திருத்தச் சட்டம் டெல்லியில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்கிறது.
ஆகவே, இந்தத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளும் ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்துவருகிறது. இந்நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் கைகளில் பதாகைகளுடன் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பதாகைகளில் “அரசியலமைப்பை கொல்வதை நிறுத்துங்கள், ஜனநாயக படுகொலையை கைவிடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ட்வீட் செய்துள்ளார்.
துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “இந்த முன்னேற்பாடுகள் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சந்திபாபு நாயுடுக்கு நோட்டீஸ்!