புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோரே ரயில் நிலையத்தில் இன்று (நவம்பர் 21) சரக்கு ரயில் தடம் புரண்டதில் 3 பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே தரப்பில், டோங்கோபோசியில் இருந்து சத்ரபூர் நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் கோரே ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது 6.45 மணியளவில் தடம்புரண்டது. இதனால் ரயிலின் 8 வேகன்கள் நடை மேடை மற்றும் பயணிகள் காத்திருப்பு கூடத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. ரயில் தடம் புரண்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் 8 ரயில்களை ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. 12 ரயில்களை மாற்று வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டன.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பெரும் விபத்து; 48 வாகனங்கள் சேதம்