காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகர் மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்.03) நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவையோடு ஆம் ஆத்மி கட்சியும் இத்தேர்தலில் களம் இறங்கியுள்ளதால் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மாநகராட்சியில் உள்ள 11 வார்டுகளுக்கு 284 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், நான்கு மையங்கள் மிகவும் பதற்றமானவை என்றும், 144 மையங்கள் பதற்றமானவை என்றும் குஜராத் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 44 கவுன்சிலர் பதவிகளுக்கு முக்கியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் என மொத்தம் 162 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதலமைச்சர் பூபேந்திர படேல் பதவியேற்ற பின் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இத்தேர்தல் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இத்துடன், தாரா (THARA) மற்றும் ஓக்கா (OKHA) மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.