ஹரியானா மாநிலம் ஜமல்பூர் கிராமத்தில் அமேசான் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் கிடங்கு அமைந்துள்ளது.ஆதித்யா சிங் என்பவர், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நடத்திய சோதனையின்போது 78 ஸ்மார்ட்போன்கள் கிடங்கில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக குருகிரம் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கிடங்கில் பொருத்தப்பட்டிந்த சிசிடிவியை ஆய்வுசெய்தபோது, அந்நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 78 ஸ்மார்ட்போன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவர்களின் வீட்டில் இருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 38 ஸ்மார்ட்போன்களை மீட்டுள்ளனர்.
விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் ஸ்மார்ட்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர். பணியின்போது ஸ்மார்ட் போன்களை திருடியதாகவும், கரோனா வழிகாட்டுதல் அமலிலிருந்ததால் தங்களை யாரும் சோதனையிடவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் யார்?
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஸ்மார்ட்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அன்சர்-உல்-ஹக், நவாப் சிங் என்பதும், சமீபத்தில்தான் அவர்கள் அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த சிங் கூறுகையில், " கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி ஸ்மார்ட்போன் கிடங்கில் நடத்திய சோதனையின்போது 78 ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. மிகக் குறுகிய காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இடமிருந்து மீதமுள்ள ஸ்மார்ட்போன்களை விரைவில் மீட்டுத் தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.