சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் உட்பட 3 பேரை வரும் 17ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த "தி மைலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்" நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம், ரூ.24 கோடி 50 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆகஸ்ட் 27 அன்று சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், போலீசார் விசாரணை நிறைவடைந்த நிலையில், 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை செப்டம்பர் 17 வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, மூவரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.