மயிலாடுதுறை: கச்சேரி சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடையில், கடந்த மே 31ஆம் தேதி நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுக்குச் சென்றபோது, அவர்களை ஆய்வு செய்யவிடாமல் தடுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பிருந்தா, முருகராஜ் இருவரும் கடையின் உரிமையாளர் உள்ளிட்ட ஊழியர்களால் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடை உரிமையாளர் உள்பட சிலர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பிரியாணி கடைக்கு சீல் வைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் அனைத்து நிலை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 400 பேர் மூன்றாவது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் மயிலாடுதுறை பேருந்து நிலையம் நகராட்சியின் 36 வார்டு பகுதிகளிலும் குப்பைகள் தேங்கியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.