விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் புது காலனியைச் சேர்ந்தவர் அருண் குமார் (25). இவர் தனது மனைவி மற்றும் மற்றும் ஒரு வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில், கடன் வாங்கியவர்களிடம் பணத்தை வசூல் செய்யும் பணியை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி, நிதி நிறுவனத்தின் மேலாளர் கடன் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்ய வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அருண்குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர், அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனையடுத்து, தனது கணவர் பணியாற்றிய நிதி நிறுவனத்தின் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.