திருவள்ளூர்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இம்மாதம் நடைபெற உள்ள முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டி, அக்கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் பிரகாசம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர், முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
அப்போது, நடிகர் விஜயின் கட்அவுட்டை பிடித்தபடி தமிழக வெற்றிக் கழகத்தினர் மாடவீதியில் ஊர்வலமாகச் சென்றனர். மேலும், 100 அடி நீளம் கொண்ட கட்சிக் கொடியுடன் சென்றனர். இதனைக் கண்ட போலீசார், பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த தவெக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி, அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக கூறினர். இதையடுத்து, கோவில் இணை ஆணையர் ரமணி புகாரில் போலீசார் தவெக நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.